எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பிரமாண்ட திரைப்படமான ‘பாகுபலி’ திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை ரூ.447 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. தென்னிந்திய திரைப்படம் ஒன்று ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் தற்போது சீன, ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் சீனா, ஜப்பான் உள்பட உலகின் பல நாடுகளிலும் ரிலீஸாக உள்ளது. அப்போது படத்தின் வசூல் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. ஆங்கில மொழியில் இந்த படத்தை எடிட்டிங் செய்ய பிரபல ஹாலிவுட் எடிட்டர் வின்செண்ட் தபாலியான் ( Vincent Tabaillon) என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஹாலிவுட்டில் வெளியான The Incredible Hulk”, “Clash of the Titans”, “Taken 2” ஆகிய படங்களை எடிட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கூடுதல் காட்சிகளில் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு போரில் சண்டையிடுவது உள்ளிட்ட வீரதீர காட்சிகளும் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary: First Film to cross 400 Crores in South Indian Industry: Bahubali.