group-2ஆங்கில வழியில் படிக்கும் மோகம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், குரூப் 2-ஏ தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் வழியில் படித்த மாணவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள 1,863 இடங்களை நிரப்ப வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி குரூப்-2ஏ போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த காலியிடங்களில் 20 சதவீதம் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை, பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்பட அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்கள், நேர்முக எழுத்தர் என 1,863 காலியிடங்கள் உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்- 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும் அதிகபட்சமாக 403 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

குரூப்-2ஏ தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓ.சி.) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது. நேர்முகத்தேர்வு எதுவும் இல்லாமல் எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

இதற்கான போட்டித்தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் நவம்பர் 11-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை 13-ம் தேதி வரை செலுத்தலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

எழுத்துத்தேர்வில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள் (10-ம் வகுப்பு கல்வித்தரம்), பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத்திறன் பகுதியில் (பட்டப் படிப்புத்தரம்) 100 கேள்விகள் என 200 கேள்விகள் இடம்பெறும். எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Group 2-A exam 20% reservation for students of the Tamil way.