சென்னை : வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சில இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது.

வட மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தான் அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும்.

இதன் காரணமாகவும், தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும், தமிழகத்தில் திங்கட்கிழமை (இன்று) ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் லேசான தூறல் மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *