பழம்பெரும் பாலிவுட் நடிகையும், நடிகர் தர்மேந்திராவின் மனைவியுமான ஹேமமாலினி கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த ஒரு பெண் குழந்தை பலியானது. நடிகை ஹேமமாலினி, பலியான பெண் குழந்தையின் தந்தை உள்பட மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய நடிகை ஹேமமாலினியை அந்த வழியாக காரில் வந்த டாக்டர் சிவ்குமார் சர்மா என்பவர் மீட்டு தனது காரில் ஏற்றி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.

அதன் பின்னர் ஹேமமாலினி ஜெய்ப்பூர் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இந்நிலையில் விபத்து நேர்ந்த போது காயம் அடைந்து வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தன்னை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உதவிய டாக்டர் சிவ்குமார் சர்மாவை கவுரவிக்க விரும்பிய நடிகை ஹேமமாலினி அவரை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஜூகுவில் உள்ள நடிகை ஹேமமாலினியின் வீட்டுக்கு வந்தார். அவரை குடும்பத்தினருடன் சேர்ந்து வரவேற்ற நடிகை ஹேமமாலினி, டாக்டர் சிவ்குமார் சர்மாவிற்கு சிறப்பான முறையில் விருந்தளித்தார். பின்னர் தன்னை விபத்தின்போது மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்து கொண்ட ஹேமாலினி, டாக்டர் சிவ்குமார் சர்மாவுக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் வழங்கி கெளரவித்தார். இந்த விருந்தில் ஹேமாலினியின் கணவர் தர்மேந்திரா, மகள் இஷாதியோல் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

English Summary : Actress Hema malni hosts a special treat for the doctor who helped her during accident.