bankபொதுத்துறை வங்கியில் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வை (Institute of Banking Personal Selection)  அமைப்பு அறிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்கும் IBPS என்ற அமைப்பு வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி, தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இந்த தேர்வை எழுதி அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுத்துறை வங்கியில் பணி வாய்ப்பு பெறலாம். இதேபோல கிராமிய வங்கிகளுக்கான தேர்வையும் இந்த அமைப்பு நடத்துகிறது.

தற்போது IBPS அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் 2016-17-ம் ஆண்டில் வங்கிகளின் காலிப் பணியிடங்களில் வேலையில் அமர்த்தப்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதர வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த தேர்வு முடிவை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதி பயன் பெறலாம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்கள்:

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2015 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1985ஆம் தேதிக்கு முன்னரும், 1-7-1995ஆம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்புத் தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும்.

கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக 1-8-15ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் 10ஆம் தேதியில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பர்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஆகும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இவ்வருடம் அக்டோபர் மாதம் 3,4,10,11 ஆகிய தேதிகளில் முதல்நிலை தேர்வும், அக்டோபர் 31ஆம் தேதி முதன்மை தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவோர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேர்காணம் நடத்தப்படும். மேலும் இந்த தேர்வு குறித்த விபரங்களை பெறவும், விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யவும் www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்,

English Summary:How to apply for employment in the public sector bank