இந்த பிரஸ்மீட்டில் கமல்ஹாசன் கூறியதாவது, ““ஏதோ ஒற்றை ஆளாக இந்த படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல், எல்லோரும் என்னைப்பற்றியே பேசினார்கள். அது சரியல்ல. சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும். ‘பாபநாசம்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படம் 3 மொழிகளில் வெற்றிபெற்ற படம். அதை எங்கள் கையில் ஒத்திகை பார்க்க தந்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்தவுடன், படக்காட்சிகளை திரையிட்டு பார்த்தேன். அப்போது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. அந்தளவுக்கு கவுதமி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இதை நான் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொல்லவில்லை. நிஜமாகவே கவுதமி திறமையான நடிகை.

எம்.எஸ்.பாஸ்கர், என்னை அடிக்கடி கடவுள் என்று அழைக்கிறார். நான் கடவுளே இல்லை என்று சொல்பவன். ‘அன்பே சிவம்’ ரூட்டில் அவர் அப்படி சொல்கிறாரோ என்று விட்டுவைத்திருக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

மேலும் தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாயம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், “ஹெல்மெட்’ அணியவேண்டும் என்பதை அறிவுரையாக சொல்லவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. கால்களை பாதுகாக்க செருப்பு அணிகிறோம். அதுபோல், தலையை பாதுகாக்க ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்ற புத்தி வேண்டாமா?, அதையும் அரசு சொல்லித்தான் தெரியவேண்டுமா” என்று கூறினார்.

English Summary : After watching “Paapanasam” shooting Kamal Haasan felt guilt after watching Gauthami acting, He also mentioned “I have locked a good actress in home”.