பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும் தேதி தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து புதுச்சேரியில் உள்ள செண்டாக் (CENTAC) கல்லூரியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 9ஆம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெற்றுள்ளனர்.

மேலும் தரவிறக்கம் செய்த இணைய விண்ணப்பத்தை நேரடியாகவும், அஞ்சல் மூலமும் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்துக்கு மாணவர்கள் அனுப்பி வருகின்றனர்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் பிள்ளைச்சாவடி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இன்று மாலை 4.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று சென்டாக் தரப்பு தெரிவித்துள்ளது.

English Summary : Last day to submit Engineering and Medical application form in Pondycherry.