chennaicentralரயில் பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்புகளை முன்னிட்டு ரயில்வே துறை அவ்வப்போது புதிய திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது  ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி செலவில் மொத்தம் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ரயில்வே துறையில் பயணிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ரயில் சேவையை மேம்படுத்துதல், புதிய வழித்தடங்கள் உருவாக்குதல், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைத்தல், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் மற்றும் திருடர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் ரயில்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை இதற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதி திட்டத்துக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் ரூ.700 கோடியை பயன்படுத்தி 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கனவே பல சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதிலும் மேலும் 100 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ரயில் நிலையங்களுக்குள் நுழையும் கார்களின் அடிப்பகுதியை சோதனை செய்யும் அதிநவீன ஸ்கேனர் கருவிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 இடங்களிலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கேமராக்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, சில கேமராக்கள் செயலிழந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மாற்றவும், புதிய கேமராக்களை பொருத்தவும் இடங்களை தேர்வு செய்து வருகிறோம். மேலும், 100 கேமராக்களை பொருத்த ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். புதிய கேமராக்கள் வந்தவுடன் ஒவ்வொரு நடைமேடைகளிலும் தலா 8 முதல் 10 கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

English Summary:More 100 CCTV Cameras in Chennai Central . Decided for Railway.