சென்னை மாநகரில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி சென்னை பெருநகரக் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு அந்த பகுதியில் ஒருசில போக்குவரத்து மாற்றத்தை செய்துள்ளது.

பங்குனி உத்திர திருவிழா முடியும் வரை கீழே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

1. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு வரை
2. சித்ரகுளம் கீழ் தெருவில் இருந்து சித்ரகுளம் வடக்குத் தெருவரை
3. நடுத்தெரு, சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு வரை
4. ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு வரை
5. புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலை சந்திப்பு வரை
6. டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரை
7. லஸ் சந்திப்பில் இருந்து ஆர்.கே. மடம் சாலை வரை

மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி மற்றும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் அறுபத்துமூவர் வீதி உலா நிகழ்ச்சிகளை ஒட்டி இந்த இரண்டு நாட்களிலும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவசலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, புனிதமேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளிக்கு செல்ல வேண்டும் என்றும் அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, வி.கே.அய்யர் சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை, கற்பகம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் திருவிழா முடியும் வரை மயிலாப்பூர் கோயில் குளம் தெருவில் உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலை அமிர்தாஞ்சன் நிறுவனம் அருகே மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.