annauniversityதமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வரும் வெள்ளியன்று முடிவடைவதை அடுத்து மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத மத்தியில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதுவரை ஆன்லைன் மற்றும் பிரிண்ட் வடிவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எந்த கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பிரிண்ட் வடிவில் விற்பனை செய்யப்படாது என்றும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறையில் இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு கடைசி நாள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 7 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு பதிவாளர் கணேசன் கூறினார்.

English Summary: Only Online Application for Engineering. Anna University Announcement.