modi with bahubali teamஇந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம், தென்னிந்தியாவிலே அதிக வசூல் செய்த சாதனை திரைப்படம், மிகப்பெரிய போஸ்டர் அடிக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்த திரைப்படம், ரூ.400 கோடிக்கும் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் போன்ற பல பெருமைகளை பெற்ற எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி’ திரைப்படம் இன்று இந்திய அளவில் பேசப்படும் ஒரு படமாக மாறிவிட்டது. இதற்கு மகுடம் சூட்டுவதுபோல், பாகுபலி’ படக்குழுவினர்களை நேற்று பாரத பிரதமர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘பாகுபலி’ திரைப்படத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மரெட்டி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பாராட்டிய நிலையில் தற்போது பிரதமரும் பாராட்டியுள்ளது படக்குழுவினர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகுபலி’ படக்குழுவினர்களுக்கு நேற்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தவுடன் உடனடியாக நாயகன் பிரபாஸ் உள்பட படக்குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்தனர். பிரபாஸ் உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை பிரதமர் மோடி தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் இன்னும் ‘பாகுபலி’ படத்தை பார்க்கவில்லை என்றும் விரைவில் அவர் ‘பாகுபலி’ படத்தை பார்க்க நேரம் ஒதுக்குவார்’ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி படக்குழுவினர்களை சந்தித்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Prime minister  modi congratulate to  bahubali team