Tamil-Nadu-Policeதமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல்நிலையங்களில் இதுவரை கையால் எஃப்ஐஆர் எழுதி வந்த நிலையில் அதற்கு விடை கொடுக்கும் வகையில், இனிமேல் கம்ப்யூட்டர் மூலம் எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக அந்தந்த காவல் நிலைய தலைமை எழுத்தர், கம்ப்யூட்டர் இயக்குபவருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

காவல் துறையை நவீனமயமாக்குவதன் மூலம் குற்றவாளிகளின் பின்புலங்களை ஆன்லைன் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த வலைப்பின்னல் திட்டம் (Crime Criminal Tracking Network system) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு காவல் துறை யில் சிப்ரஸ் (Common Integrated Police Record Updation System) என்னும் ஒருங்கிணைந்த வலைப்பின்னல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையங்களில் உள்ள எஃப்ஐஆர்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலைய எழுத்தர் (ரைட்டர்) எஃப்ஐ ஆரை தற்போது வரை கையால்தான் எழுதி வருகிறார்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த வலைப்பின்னல் திட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆன் லைன் மூலம் எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் 5 மாதங்களுக்கு முன்பிருந்து சோதனை அடிப்படையில் செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்ததால் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நீதித்துறையும் கணினி வழியில் எஃப்ஐஆர் வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

கணினி மூலம் எஃப்ஐஆர் வழங்குவதற்காக எழுத்தர், கம்ப்யூட்டர் இயக்குபவருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது ஆன்லைன் மூலம் சிஎஸ்ஆர் ரசீது வழங்கி வருகிறோம். இனிமேல் எஃப்ஐஆரும் வழங்கப்பட உள்ளன.

இதில் டைப்-1, டைப்-2 என இருவகை உள்ளது. டைப்-1 என்பது முழுக்க முழுக்க கணினி வழியாக ஏ-4 அளவில் எஃப்ஐஆர் பிரின்ட் அவுட் எடுக்கப்படும். ஒவ்வொன்றுக்கும் கிரைம் எண் வழங்கப்படும். அந்த எண்ணை வைத்து தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும் கிரைம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். கிரைமில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் அனைத்து அடையாளங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

கணினி பழுது மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிரின்ட் அவுட் எடுக்க முடியாதபட்சத்தில், துறையால் வழங்கப்பட்டுள்ள ஏ-4 பேப்பரில் (பின்னணியில் அரசு முத்திரை இருக்கும்) கையால் எழுதி எஃப்ஐஆர் வழங்குவது டைப்-2 எனப்படும்.

வரும் காலங்களில் நீதித்துறை, சிறைத்துறை, தடயவியல் ஆய்வுத் துறையும் இந்த வலைப்பின்னலில் இணையவுள்ளன. இதன்மூலம் வழக்கு, குற்றவாளியின் அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: Since April 15 Tamil Nadu police stations FIR through a computer .