vivek-30102015கோலிவுட் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னகுமார் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்-அருள்செல்வி தம்பதிகளின் மகன் பிரசன்னகுமார் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 40 நாட்களாக மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிரசன்னகுமார், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசை மீது பிரசன்னகுமார் அதிக நாட்டம் கொண்டிருந்ததாகவும், புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் பெற்றுள்ளதாகவும் விவேக் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். மறைந்த பிரசன்னகுமாருக்கு நந்தினி, தேஜஸ்வினி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னகுமாரின் மறைவு செய்தி கேட்டவுடன் திரையுலகப் பிரபலங்கள் பலரும் விவேக்குக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். அஜீத், விஜய், தனுஷ், உள்பட முக்கிய நடிகர்கள் விவேக்கின் இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள விவேக் வீட்டில் பிரசன்னகுமாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளதாகவும், விருகம்பாக்கம் இளங்கோ நகர் மின்மயானத்தில் இன்று மாலை 4 மணிக்கு உடல் தகனம் நடக்கவிருப்பதாகவும் விவேக் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனது மகன் மறைவு குறித்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று விவேக் வெளியிட்ட வேண்டுகோளில், ‘‘தீவிர காய்ச்சலின் பாதிப்புக்கு மகனைப் பறிகொடுத்துவிட்டு, நானும் குடும்பத்தினரும் வேதனையில் இருக்கிறோம். எனவே, செய்தியாளர்கள், தொலைக்காட்சி, இணையதள நண்பர்கள் செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்கவோ என் வீட்டுக்கு வருவதை அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
English summary-Actor Vivek’s son Prasanna Kumar passed away due to brain fever.