madrasuniversity30915சென்னை பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி சனிக்கிழமை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: கடந்த 2013, 2014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் இளநிலை கலை, அறிவியல் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 1,200 மாணவர்களை பணிக்காகத் தேர்வு செய்ய உள்ளன. முகாம் மூலம் அளிக்கப்படும் பணிகள் அனைத்தும் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கக் கூடிய பகல் நேரப் பணிகளாகவே இருக்கும்.

இந்த முகாம் குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 95516 90630, 95516 90631 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு பல்கலைக்கழக செய்திக்குறிப்பு கூறுகின்றது.

English Summary:Work Camp in Madras University on Oct-3.