நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘மேரிகோம்’ என்ற குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய இயக்குனர் ஓமங் குமார், அடுத்ததாக மற்றொரு உண்மைக்கதையை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சர்பீத்சிங் என்ற இந்திய விவசாயியை உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து 23 ஆண்டுகளாக சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது. அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன்னரே சிறையில் சக கைதிகளால் அவர் அடித்து கொல்லப்பட்டார். சர்பீத்சிங்கின் தங்கை தல்பீர் கவுர் அவரை பாகிஸ்தான் சிறைக்கு சென்று மூன்று முறை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஓமங் குமார், சர்பீத்சிங் அவர்களின் சகோதரி தல்பீர் கெளர் அவர்களை நேரில் சந்தித்து அவருடன் ஆலோசனை செய்து சர்பீத்சிங் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை கேட்டறிந்து அதன்பின்னர் அவருடைய அனுமதியுடன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தல்பீர் கெளர் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்பீத்சிங் வேடத்திலும் மற்ற கேரக்டர்களிலும் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary : Aishwarya Rai plays the younger sister role of a death row prisoner.