விஜய் நடித்த ‘புலி’ படத்தின் டீசரை இணையத்தில் வெளியிட்ட தொழில்நுட்ப கலைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று விஜய்யின் 41வது பிறந்த நாளை அடுத்து இன்று அதிகாலை 12மணிக்கு புலி படத்தின் டீஸரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த படத்தின் டீஸரை ஃபோர் பிரேம்ஸ் ஸ்டுடியோவில் பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த மிதுன் என்பவர் படக்குழுவினர்களின் அனுமதியின்றி யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் ஃபோர் பிரேம்ஸ் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஃபோர் பிரேம்ஸ் ஸ்டுடியோவில் இண்டன்ஷிப் எஞ்ஜினியராக பயிற்சி பெற்று வரும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் அவர்கள் கூறியபோது, ‘விஜய் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் இணைந்து பிரமாண்டமாக உருவாகியிருக்கும் புலி படத்தின் டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் எங்களது ஒட்டுமொத்த படக்குழுவும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் புலி படத்தை இப்படி யாரோ ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வெளியிடுவது கடுமையாக தண்டிக்கதக்கது. இப்படி ஒரு டீசர் வெளியானதால் எங்களுக்கு பெரிய பயம் எழுந்துள்ளது’ என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

English Summary : Engineer arrested because of releasing “puli” teaser without any approval for their team.