நேற்று நடைபெற்ற குரூப் 1 மெயின் தேர்வின் விடைகள் ஒருவாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசில் துணை கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி வணிகவரித்துறை ஆணையர்கள், மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 4 ஆயிரத்து 282 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இருப்பினும் நேற்று குரூப்-1 மெயின் தேர்வில் 3 ஆயிரத்து 450 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வுக்கான விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும், வழக்கமாக தேர்வு எழுத மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்படுகிறது என்றும் ஆனால் மாற்றுத்திறனாளி ஆர்.ரமேஷ் என்பவர் தனக்கு எழுத கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் மூலம் கேட்டிருந்தபடியால் அவருக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.

English Summary : TNPSC announces that Group 1 exam answers will be produced within a week.