உலகம் முழுவதும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்கள் முறை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்களை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுக்களை மாற்றிக்கொள்ள கடந்த நவம்பர் மாதத்துடன் அவகாசம் முடிந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:-

உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் நடப்பாண்டில் இருந்து தானியங்கி எந்திரங்களே சரிபார்த்து, பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களை அனுமதிக்க சர்வதேச சிவில் விமானபோக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்து இருக்கிறது.

அதேநேரம் கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தவகை பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அதனுடைய கால அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது பிப்ரவரி 8-ந் தேதி வரை கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களில் வழங்கிவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அவகாசம் அளித்து இருக்கிறது.

இதற்கான பணிகளில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் துரிதமாக இறங்கி உள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் புதுப்பிக்கும் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குள் மேல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் புதுப்பிக்கும் காலம் 20 ஆண்டுகள் இருக்கும் பாஸ்போர்ட்டுகளை, மாற்றி 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையிலான பாஸ்போர்ட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் சாதாரண வகை பாஸ்போர்ட்டுகளை, பாஸ்போர்ட் அலுவலகங்களில் வழங்கிவிட்டு 64 பக்கங்கள் கொண்ட ‘ஜம்போ’ பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்து ‘பாஸ்போர்ட்’களை பெறுவதை தவிர்க்கவேண்டும்.

‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்படுகிறது. அதேநேரம் போலீஸ் விசாரணையில் ‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனை தவிர்க்க சாதாரண வகையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கலாம்.

‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 நாட்களிலும், சாதாரண வகையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களிலும் ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது.

சொந்த ஊர் விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பித்தால், தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்கவேண்டும்.

அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவர் மற்றும் முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: Hand Written Passports can be changed till February 8.