தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி தலைவரான ஜெயலலிதாவும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதியும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவும் திருவாரூரில் கருணாநிதியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தண்டயார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கலின் போது ஜெயலலிதாவுடன் சசிகலா வந்திருந்தார். ஜெயலலிதாவின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் எழுந்து நின்று பெற்றுக் கொண்டார்.

இதேபோல் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்து மீனாட்சி அவர்களிடம் திமுக தலைவர் மு.கருணாநிதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய மனைவி ராஜாத்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

இரண்டு பெரிய தலைவர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English Summary : Jayalalitha, Karunanidhi nominated at the same day.