கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மாறிவிட்டதால், அவர் விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட நடிகர் சூரி. கடந்த வருடம் விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் நடித்த சூரி, தற்போது அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து சூரி கூறியபோது, ‘ஒவ்வொரு நடிகனுக்கும் அஜீத், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது. ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்துவிட்டதால், அடுத்து அஜித்துடன் எப்போது நடிக்க போகிறோம் என்று காத்திருந்தேன். என்னுடைய வீட்டில் உள்ளவர்களும் எனது நெருங்கிய நண்பர்களும் எப்போது அஜீத் படத்தில் நடிக்க போகிறாய் கேட்டு கொண்டே இருந்தார்கள். அந்த ஆசை தற்போதுதான் நிறைவேறியுள்ளது.

அஜீத்துடன் ‘தல 56’ படத்தில் நான் இரண்டே இரண்டு நாள்தான் நடித்தேன். ஆனால் அதற்குள் அவருடன் பல வருடங்கள் பழகியதுபோன்று இருந்தது. எனக்கு அவர் பல அறிவுரைகள் கூறினாலும், அவர் சொன்ன முக்கிய அறிவுரையான ‘நீ நீயாகவே இரு. மற்றவர்களுக்காக நீ எந்த நிலையிலும் உன்னுடைய தனித்தன்மையில் இருந்து மாறாதே. உன்னுடைய வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் உன்னுடைய பர்சனாலிட்டி என்றும் மாறக்கூடாது’ என்று கூறியதை நான் கடைசி வரை மறக்க மாட்டேன்’ என்று கூறினார்.

English Summary : “Never change your character” Ajith’s adviced to Soori in Thala56 shooting spot.