பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு ஒன்றை இந்திய அஞ்சல் துறை செய்துள்ளது.

இதன்படி சென்னையில் பூங்கா நகர், அண்ணா நகர், அண்ணா நகர் மேற்கு, கீழ்ப்பாக்கம், எழும்பூர் ஆகிய அஞ்சல் நிலையங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும் என்றும் இந்த கவுண்டர்களில் பூர்த்தி செய்யப்பட்ட பி.இ மற்றும் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்களை மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்கலாம் என்றும் தபால் துறை அறிவித்துள்ளது.

பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கும் இன்று மாலை 5 மணிக்குள் சென்று சேர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேதி நீட்டிப்பு இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் அஞ்சல் நிலைய கவுண்டர்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

English Summary: Special Arrangements are made for BE and MBBS Applications by Postal Department.